விளையாட்டு

கிளந்தான் எஃப்.சி-ஐ வீழ்த்தியது நெகிரி செம்பிலான் எஃப்.சி

19/04/2021 09:36 PM

கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசிய பிரீமியர் லீக் கால்பந்து போட்டி குறித்த செய்தி.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் எஃப்.சி 2-1 என்ற கோல்களில், கிளந்தான் எஃப்.சியை தோற்கடித்து புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் நிலையைத் தக்க வைத்திருக்கிறது.

முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து முன்னணியில் இருந்த நெகிரி செம்பிலான் எஃப்.சி இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடியது.

எனினும், அதன் தற்காப்பு அரணில் ஏற்பட்ட தவறின் காரணமாக கிளந்தான் எஃப்.சி, தனது முதல் கோலைப் போட்டது.

ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக நகர்த்த தமது அணியில் சில மாற்றங்களை செய்ததாக நெகிரி செம்பிலான் எஃப்.சி தலைமை பயிற்சியாளர் கே.தேவன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அதே வேளையில், மாற்றங்களை செய்தவுடன் மேலும் ஒரு கோலை அடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றார் அவர்.

அதன் பின்னர், நெகிரி செம்பிலான் எஃப்.சிக்கான இரண்டாவது கோலை முகமட் சாகுவேன் அட்ஹா அப்துல் ரட்சாக் போட்டார்.

இவ்வாட்டத்தில், கிடைத்த வெற்றி இம்மாதம் 24-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சரவா யுனைடட் எஃப்.சி உடனான ஆட்டத்திற்கு ஓர் ஊக்குவிப்பாக அமையும் என்று கே.தேவன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா