புத்ராஜெயா, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டை செலுத்துவதற்கு எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களும் போலியான கையொப்பம் அல்லது அதனை வெட்டி ஒட்டியதாக, எதிர்தரப்பு செய்த வாதம் அந்த முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒரு விவகாரம் அல்ல என்று புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவ்விவகாரம் தொடர்பில் சர்ச்சை எதுவும் இருந்தால், அது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் வங்கிக்கும் இடையிலானதே தவிர டத்தோ ஶ்ரீ நஜீப்பிடம் அல்ல என்று அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ வி.சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.
எதிர்தரப்பு மற்றவரின் விவகாரங்களில் மட்டுமே தலையிடுவதாகவும் நஜிப்புக்கு வங்கியுடன் ஒப்பந்த தனியுரிமை இல்லை என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டில் மோசடி அல்லது அனுமதியின்றி வருடுதல் மற்றும் மின்னியல் பணமாற்றம் ஆகிய விவகாரங்கள் ஆரம்பம் அல்ல.
மாறாக, எதிர்தரப்பு எழுப்பிய விவகாரம் கவனத்தைத் திசை திருப்புவதற்கு மட்டுமே ஆகும்.
அதோடு, அப்போதைய பிரதமரைத் திருத்துவதற்கான தைரியம் யாருக்கு இருந்தது என்பது குறித்தும் சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டை நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து நஜிப் செய்த மேல்முறையீட்டில் நீதிபதி டத்தோ அப்துல் கரிம் அப்துல் ஜாலில் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு முன்னிலையில் அவர் அவ்வாறு வாதிட்டிருக்கிறார்.
தமது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட அத்தொகையை நஜீப் பெற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்டாலும் இன்னும் அதனை எஸ்.ஆர்.சி-யிடம் திரும்பச் செலுத்தவில்லை என்றும் சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை