விளையாட்டு

உலகக் கிண்ணம்: மூன்றாவது இடத்தைப் பிடித்தது குரோஷியா

18/12/2022 08:03 PM

கட்டார், 18 டிசம்பர் (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்து போட்டியின் மூன்றாவது இடத்தை குரோஷியா தட்டிச் சென்றது.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மொரொக்கோவை 2-1 என்ற கோல்களில் வீழ்த்தி குரோஷியா அதன் ரசிகளை மகிழ்ச்சிப்படுத்தியது.

ஆட்டம் தொடங்கிய 7-ஆவது நிமிடத்திலேயே ஜொஸ்கோ குவார்டியோல் முதல் கோலை அடித்து குரோஷியாவை முன்னணி வகிக்கச் செய்தார்.

இருப்பினும் அடுத்த மூன்று நிமிடங்களில் மொரொக்கோ அதன் ஒரே கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது.

முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த வேளையில் குரோஷியா தனது வெற்றி கோலை அடித்து மூன்றாவது இடத்தை தட்டிச் சென்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு நாடுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை அனைத்து பயனளிக்கவில்லை.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண காற்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்று பிரான்சுடன் தோல்வி கண்ட குரோஷியா இம்முறை மூன்றாவது இடத்தை சொந்தமாக்கி கொண்டது.

1998-ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்து போட்டியிலும் நெதர்லாந்தை 2-1 வீழ்த்தி குரோஷியா மூன்றாவது இடத்தை பிடித்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]