அரசியல்

கட்சியின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்படும் - அஹ்மாட் சாயிட்

28/01/2023 08:53 PM

கோலாலம்பூர், 28 ஜனவரி (பெர்னாமா) -- கட்சியின் சில தலைவர்கள் பதவி நீக்கம் மற்றும் இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாயிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார்.

அது தொடர்பாக மேல் விவரங்களை வழங்க மறுத்த அவர், பின்னர் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்படும் என்று கூறினார்.

"நான் பதில் வழங்கும் வரை காத்திருங்கள். ஒரு நிகழ்ச்சியில் அதற்கான விளக்கங்களை அளிக்கிறேன்," என்றார் அஹ்மாட்.

சனிக்கிழமை, கூட்டரசு பிரதேச இஸ்லாமிய மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அம்னோவின் உச்ச மன்ற கூட்டம் குறித்து வினவிய போது அஹ்மாட் அவ்வாறு கருத்துரைத்தார்.

அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடினும் தஞ்சோங் காராங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஶ்ரீ நோ ஓமாரும் அம்னோவில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)