விளையாட்டு

பண்டஸ்லீகா : லெய்ப்சிக் 5-0 கோல்களில் மையின்சைத் தோற்கடித்தது

26/05/2020 04:57 PM

மெயின்ஸ், 25 மே (பெர்னாமா) -- நேற்று நடைபெற்ற ஜெர்மனி பண்டேஸ்லீகா கிண்ணப் போட்டி ஆட்டம் ஒன்றில், லெய்ப்சிக் 5-0 என்ற கோல்களில் மையின்சைத் தோற்கடித்துள்ளது. 

இந்த  வெற்றியின் மூலம், அது புள்ளிப்பட்டியலில் 54 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் தனது கோல் வேட்டையைத் தொடங்கிய லெய்ப்சிக் முதல் கோலை திமோ வெர்னர் மூலம் அடித்தது. 

அதனை அடுத்து, ஆட்டத்தை தனது பிடியில் வைத்திருந்த லெய்ப்சிக் மேலும் இரண்டு கோல்களை அடுத்து  முதல் பாதி ஆட்டத்தை 3-0 என்ற நிலையில் முடித்தது. 

இரண்டாம் பாதி ஆட்டத்தில், மையின்சின் தற்காப்பு பகுதி மேலும் பலவீனமானதில்,  திமோ வெர்னர் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு ஹட்ரிக் சாதனையைச் செய்தார். 

மற்றுமொரு நிலவரத்தில், ஜெர்மனி பண்டேஸ்லீகா ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாத அரங்குகளில் நடத்தப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், அரங்கில் ரசிகர்கள் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வை ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் நோக்கத்தில், மொன்சங்கெலட்பேக் மற்றும் பாயேன் லவகுசேன் இடையிலான ஆட்டத்தில் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
அரங்கில் ரசிகர்கள்  அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சுமார் 13 ஆயிரம் உருவப் படங்கள் இருக்கைகளில் வைக்கப்பட்டிருந்தன.