கோத்தா பாரு, 05 ஜூலை (பெர்னாமா) -- நேற்றிரவு மணி எட்டுக்கு பாசிர் மாஸ், கம்போங் பூலாய்யில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சோதனை நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் கோலோக் ஆற்றில் குதித்த ஆடவர் ஒருவர் மரணமடைந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
41 வயதுடைய முஹமட் யுக்கி முஹமட் யூசோஃப் அந்த ஆற்றில் குதித்த நிலையில் அவரை இதுவரை கண்டறிய முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை மணி 3.17-க்கு தமது தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை நடவடிக்கை பிரிவின் மூத்த கமண்டர் முஹமட் அஸ்மி ஹுசின் தெரிவித்தார்.
இன்று அதிகாலை தொடங்கிய தேடி மீட்கும் பணியில் பாசிர் மாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் ஈடுபட்டதாகவும் அதன் மேலும் 19 உறுப்பினர்கள் அதிகரிக்கப்பட்டதாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
அந்நபரை தேடி மீட்கும் பணி தொடரப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]