பொது

3R விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்க தயார் - முகிடின் 

19/08/2024 06:38 PM

கோலாலம்பூர், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நடந்து முடிந்த நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்களை வேண்டுமென்றே பேசியதாக தாம் எதிர்நோக்கியிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.  

தாம் வெளியிற்ற கூற்று நாட்டின் சட்டத்திற்கு முரணானதாக இருக்காது என்று நம்புவதாக இன்று தமது சமூக ஊடக பதிவின் வழி முகிடின் கூறியுள்ளார். 

நாளை காலை மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான, எம்.ஐ.டி.ஏ அலுவலகத்தில் அந்த முன்னாள் பிரதமரின் விளக்கம் பதிவு செய்யப்படும் என்று தேசிய போலீஸ் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.  

பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரி-அயாத்துடின் அல்-முஸ்தாஃபா பில்லா ஷா 16-வது மாமன்னராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில், அவரின் கடமையையும் பொறுப்பையும் அலட்சியப்படுத்தும் விதமாக முகிடினின் கூற்று அமைந்திருப்பதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முகிடினுடன் சமரசம் காணாமல் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்படி பகாங் மாநில பட்டத்து இளவரசர் தெங்கு ஹசானால் இப்ராஹிம் ஆலம் ஷா போலீசை வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]