Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

செலாயாங்கில் சட்டவிரோத குடியேறிகள் மீது சோதனை

30/05/2025 01:08 PM

செலாயாங், 30 மே (பெர்னாமா) -- சிலாங்கூர் செலாயாங்கில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருப்பதாக நம்பப்படும் வளாகங்களில் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

காட்சி (KACHI) நடவடிக்கை எனப்படும் அந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட அமலாக்க உறுப்பினர்கள் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உட்படுத்தி 225 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

நேற்றிரவு மணி 10.45-க்கு தொடங்கி இன்று காலை மணி 6-க்கு நிறைவுற்ற இச்சோதனையில் 1500 பேர் பரிசோதிக்கப்பட்டதாக புக்கிட் அமானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி துறை, கே.டி.என்.கே.ஏ-இன் துணை இயக்குநர்  டத்தோ முஹமாட் சுஸ்ரின் முஹமாட் ரொடி தெரிவித்தார்.

"ஆறு நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலாவது இந்தியாவைச் சேர்ந்த 9 பேர், பின்னர் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், வங்காளதேசத்தைச் சேர்ந்த 142 பேர், பின்னர் இந்தோனேசியாவின் நால்வர் மற்றும் அதிகபட்சமாக மியன்மாரைச் சேர்ந்த 1,435 பேர் சோதிக்கப்பட்டனர்," என்று அவர் கூறினார்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலான அந்நிய நாட்டினர் செலாயாங் மொத்த விற்பனை சந்தை மற்றும் அருகிலுள்ள வணிக வளாகங்களில் பணிபுரிந்ததாக நம்பப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தை மீறித் தங்கியிருத்தல், முறையான பயண ஆவணங்கள் இல்லாதது, மின்சார இனைப்பை மாற்றியமைத்தல், சட்டவிரோத நீர் இணைப்பு மற்றும் உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தது ஆகிய குற்றச் செயல்கள், இச்சோதனையின் வழி கண்டறியப்பட்டன.

அப்பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் பலர் இருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)