கங்கார், 02 ஜூன் (பெர்னாமா) -- நேற்று, பெர்லிஸ், பெசேரியில் உள்ள கம்போங் பெலாட் பத்துவில் 40 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 1 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 365 கிலோகிராம் எடை கொண்ட ஷாபு வகை போதைப் பொருளை, அம்மாநில போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேற்று, அதிகாலை மணி 3.30-க்கு, போதைப் பொருள் குறித்து தகவல் பெற்றதைத் தொடர்ந்து, மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்ற புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என் குழுவினரால் கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பெர்லிஸ் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அப்துல் ஹலிம் கூறினார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, அச்சந்தேக நபர் Proton Waja ரக காரிலிருந்து இறங்கி Toyota Vios ரக காரை நோக்கிச் சென்றதாக, டத்தோ முஹமட் அப்துல் ஹலிம் கூறினார்.
''தைக்கப்பட்ட சாக்குகளின் வடிவில் 17 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணை மேற்கொண்டதில், அந்த பொட்டலங்களில் இருந்த பொருள் ஷாபு வகை போதைப் பொருள் என்பதைக் கண்டறிந்தோம்'', என்றார் அவர்.
இன்று, கங்காரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அதனை கூறினார்.
36 லட்சம் பேர் பயன்படுத்தக்கூடிய அந்த போதைப்பொருளை நாட்டின் தெற்கு பகுதிக்கு விநியோகம் செய்வதற்கு முன்னதாக, பாடாங் பெசாரில் உள்ள ஒரு காட்டுப் பகுதியைப் போக்குவரத்து தளமாக, அச்சந்தேக நபர் பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, முஹமட் தெரிவித்தார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆடவர், நேற்று தொடங்கி ஏழு நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைக்கு உதவ தப்பிச் சென்ற மற்றொரு சந்தேக நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 39பி-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)