Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

ஜே.பி.பி.எம் K9 மோப்ப நாய்களை கையாளும் பராமரிப்பாளர்களின் பங்கும் அளப்பரியது

06/06/2025 08:13 PM

கோலாலம்பூர், 06 ஜூன் (பெர்னாமா) -- மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஜே.பி.பி.எம் -இன் K9 பிரிவு மோப்ப நாய்களை கண்காணிப்பது சவால் நிறைந்த பணியாகும்.

தேடல் மற்றும் மீட்பு பணிகளில் மோப்ப நாய்கள் சிறப்பாக செயல்படுவதற்கு வழங்கப்படும் பயிற்சி, உணவு உட்பட சுகாதாரம் மற்றும் பராமரிப்பு செயல்முறைகளில் தினசரி கவனம் செலுத்தப்படுகிறது.

அச்செயல்முறைகளில் ஈடுபடும் மோப்ப நாய்களின் பராமரிப்பாளர் பணிகள் குறித்து பகிர்கின்றார், JBPM-மின் இரண்டாவது தீயணைப்பு பிரிவு துணை அமலாக்க அதிகாரி பிரேம்நாத் ஹரிஷ்கிருஷ்ணா.

ஒரு மோப்ப நாய்க்கு ஒரு பராமரிப்பாளர் என்ற அடிப்படையில் கையாளும் நபரின் பணிகள் அமைந்திருக்கும்.

நாய்களுக்கான தினசரி பராமரிப்பு பணிகளையும், தேடல் மற்றும் மீட்பு பணிகளின் போது அவற்றின் நடவடிக்கைகளையும் அதன் பராமரிப்பாளர்கள் அறிந்து வைத்திருப்பர் என்று பிரேம்நாத் ஹரிஷ்கிருஷ்ணா தெரிவித்தார்.

''நாயின் சுகாதாரத்திற்கு அவர்கள்தான் பொறுப்பு. நாய்கள் எங்கு கொண்டுச் சென்றாலும் அவர்கள்தான் உடன் செல்ல வேண்டும். நாயின் பயிற்சி செயல்முறை, நடைபயிற்சி செயல்முறை அனைத்தும் அவர்களது பொறுப்பு. நாயின் சகிப்புத்தன்மை, நாயின் பங்களிப்பு இதில் அடங்கும். அவர்கள் தவறு செய்தால் நாயின் பங்களிப்பும் பாதிக்கப்படும். நாயின் செயல்திறன் அளவை அவர்கள் சீராக வைத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

சுகாதார அடிப்படையில், நாய்களின் உணவு மற்றும் உடல் நலத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக பிரேம்நாத் தெரிவித்தார்.

நாய்களின் உடல் எடை மற்றும் அதன் பணிகளுக்கு ஏற்ப உணவுகள் வழங்கப்படுகிறது.

அதோடு, சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதோடு குறிப்பிட்ட காலத்திற்கு தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என்று அவர் விவரித்தார்.

''நாய் களத்தில் இறங்கி சிறப்பாக செயல்பட வேண்டும். நாயின் உடல் எடையில் கவனம் செலுத்தி நல்ல உணவை வழங்க வேண்டும். தேவைப்படும் SUPPLEMENTS வழங்கப்பட வேண்டும். சுகாதார பரிசோதனைகளுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை இரு தடுப்பூசிகள் செலுத்த வேண்டும். இவை அனைத்தும் நாய்களுக்கு அவசியமானது,'' என்றார் அவர்.

நாய்கள் எப்போதும் தூய்மையாக இருப்பதையும் பராமரிப்பாளர்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

நாய்களை பராமரிக்கும் போது செலவிடும் நேரம் பராமரிப்பாளர்களுக்கு அவசியமானது என்பதையும் காரணத்துடன் பிரேம்நாத் விளக்கினார்.

தேடல் மற்றும் மீட்பு பணிகளில் மோப்ப நாய்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அவற்றை பராமரித்து கடமையாற்றும் பராமரிப்பாளர்களின் பங்கும் அளப்பரியது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜே.பி.பி.எம்-இன் K9 மோப்ப நாய் பிரிவு குறித்து பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலில் பிரேம்நாத் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)