ஷா ஆலம், 23 ஜனவரி (பெர்னாமா) -- சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரிங்கிட் வருமானம் பெற்றதாக, முன்னாள் தரைப்படைத் தளபதி டான் ஶ்ரீ முஹமட் ஹஃபிசூடின் ஜந்தான் மீது இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், நீதிபதி டத்தோ முஹமட் நசிர் நோர்டின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அவ்விரு குற்றச்சாட்டுகளையும் 58 வயதான முஹமட் ஹஃபிசூடின் மறுத்து விசாரணைக் கோரினார்.
இராணுவ கொள்முதல் குத்தகை சம்பந்தப்பட்ட கள்ளப்பண பரிமாற்றம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முதல் தரைப்படைத் தளபதி முஹமட் ஹஃபிசூடின் ஆவார்.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் ஒரு லட்சத்து 15,000 ரிங்கிட் மற்றும் 30,000 ரிங்கிட் ஆகிய தொகைகள் முஹமட் ஹஃபிசூடினுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட்டதாக அவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதியிலிருந்து 2025-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதிக்கு உட்பட்ட காலக்கட்டத்தில், அம்பாங் Point-இல் உள்ள ஒரு வங்கியில் அக்குற்றங்களை அவர் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு கள்ளப்பண பரிமாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம், துணைச் சட்டம் 4(1)(b)-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட தொகையின் ஐந்து மடங்கிற்கும் குறையாத அபராதம் அல்லது ஐந்து லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகைச் செய்யும் அதேச் சட்டம் சப்செக்ஷன் 4(1)-இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் 21 லட்சத்து 20-ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் வருமானம் பெற்றதாக, அவர் மீது நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)