பத்துமலை, 01 பிப்ரவரி (பெர்னாமா) -- 'Geng Captain Praba' என்று அழைக்கப்படும் திட்டமிடப்பட்ட குற்றவியல் கும்பலின் உறுப்பினர் ஒருவரை, நேற்று, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம், தாய்லாந்தில் இருந்து இந்நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
பி.டி.ஆர்.எம் மற்றும் தாய்லாந்து போலீசாருக்கு இடையிலான அணுக்கமான ஒத்துழைப்பின் விளைவாக, 30 வயதான அந்த ஆண் சந்தேக நபர் இரவு மணி 10.30 அளவில் நாட்டிற்கு வந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர், டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
''இதுவரை, எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி பதினைந்து பேர் உள்ளனர். பதினேழு பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். அண்மையக் காலத்திலும் தொடர்புடையவர்கள் மேலும் உள்ளனர்'', என்றார் அவர்.
இன்று, பத்துமலையில் ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில், பி.டி.ஆர்.எம்-மின் தண்ணீர் பந்தளுக்கு வருகையளித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, நேற்றிரவு, பத்துமலையில் கலவரத்தை ஏற்படுத்தியதற்காக 'இன்ஸ்பெக்டர் ஷீலா' என்று அழைக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதை பி.டி.ஆர்.எம் உறுதிப்படுத்தியது.
ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார் என்ற இயற்பெயர் கொண்ட அப்பெண் ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
1955-ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டம், செக்ஷன் 14 மற்றும் குற்றவியல் சட்டம், செக்ஷன் 186-இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)