சிலாங்கூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், பிரதமர் பதவியை 10 ஆண்டுகளாக கட்டுப்படுத்தும் சட்ட மசோதா உடனடியாக அங்கீகரிக்கப்படும்.
புதிய தலைமைத்துவம் தங்களின் சேவையைத் தொடர வாய்ப்பளிப்பதற்கு முன்னர், நாட்டின் சீர்திருத்த திட்டங்களையும் முக்கிய கொள்கைகளையும் செயல்படுத்த ஒரு பிரதமருக்கு 10 ஆண்டுகள் போதுமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''ஏனென்றால், நாட்டிற்கு உண்மையாக சேவை செய்ய விரும்பும் எவருக்கும், தன்னால் முடிந்ததைச் செய்ய 10 ஆண்டுகள் போதுமானது. அதன் பின்னர் மற்ற நண்பர்கள் தொடர்ந்து சேவை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்,'' என்றார் அவர்.
இன்று சிலாங்கூர், கோலா லங்காட், கம்போங் ஶ்ரீ சீடிங்கில் உள்ள நூருல் ஹிடாயா பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அவ்வாறு கூறினார்.
பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பிரதருக்கான பதவிக்கால வரம்பு, முதலில் தம்மிடமிருந்து தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)