சிலாங்கூர், 17 மே (பெர்னாமா) -- சிலாங்கூர், பண்டார் பாரு கிள்ளானில் உள்ள ஜாலான் பெக்கான் பாரு சாலையில் வெள்ளிக்கிழமை மூன்று பாதசாரிகள் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 75 வயது முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில், இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அந்த முதியவர் நேற்று காலை மணி சுமார் 11.40 அளவில் கைது செய்யப்பட்டதாக, வடகிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி எஸ்.விஜயராவ் தெரிவித்தார்.
அந்த முதியவருக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் எந்தவிதமான குற்றப் பதிவுகளோ அல்லது போதைப்பொருள் தொடர்பான பதிவுகளோ இல்லை என்பதால் அடுத்தகட்ட விசாரணைக்காக அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் அஹ்மட் ஃபட்ஸ்லி அப்துல்லாவை 017-5843860 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, கடந்த மே 15-ஆம் தேதி பண்டார் பாரு கிளாங்கில் உள்ள ஜாலான் பெக்கான் பாருவில் மூன்று பாதசாரிகள் மீது SUV ரக வாகனம் ஒன்று மோதிய சம்பவத்தில் இரு உடன்பிறப்புகள் உயிரிழந்ததோடு மற்றொருவர் காயமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக விஜயராவ் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)