கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா) -- ஊடகத் துறையில் 59 ஆண்டுகள் நிறைவு விழா என்பது, மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல.
அது அந்த செய்தி நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் பக்குவப்படுத்திய நீண்டகால பயணத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
மேலும், நாட்டின் நம்பகமான செய்தி நிறுவனமாக பெர்னாமாவை தொடர்ந்து நிலைநிறுத்துவதில், 30 ஆண்டுகளுக்கும் மேலான ஊழியர்களின் அனுபவமும் அர்ப்பணிப்புமே முக்கிய பலமாக விளங்குவதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு AI மற்றும் மிக வேகமாக பரவும் இலக்கவியல் தகவல் காலக்கட்டத்தில், செய்தி உள்ளடக்கங்களை தயாரிக்கும் போது செய்தியாளர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.
இன்று, விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற பெர்னாமாவின் 59-ஆம் ஆண்டு
நிறைவு விழாவில் கலந்துகொண்டபோது அவர் அதனைக் கூறினார்.
பெர்னாமாவின், புதிய தலைமுறை ஊழியர்கள், எதிர்காலத்தில் அந்த செய்தி நிறுவனத்தின் சிறப்பை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சிப்பார்கள் எனவும் நூருல் அஃபிடா கமாலுடின் நம்பிக்கை தெரிவித்தார்.
பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சுன் வோய், தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரார் ராஜூ மற்றும் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)