சுங்கை பூலோ, 14 ஜூலை (பெர்னாமா) -- பெட்டாலிங் மாவட்ட காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆர்ஆர்ஐ தோட்டத் திடலில் நடைபெற்ற சிலாங்கூர் கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான காற்பந்து போட்டியில் பூச்சோங் 14 மற்றும் வாகிசர் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின.
இக்காற்பந்து போட்டியில் 22 மகளிர் குழுக்கள் உட்பட மொத்தம் 101 குழுக்கள் கலந்து கொண்டன.
ஆண்கள் பிரிவுக்கான இறுதி ஆட்டத்திற்கு பூச்சோங் 14 ஆவது தமிழ்ப்பள்ளியும் பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியும் தேர்வாகின.
இதில் பெனால்டி வழி, பூச்சோங் 14 தமிழ்ப்பள்ளி, பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியை வீழ்த்தி நமச்சிவாயம் கிண்ணத்தையும் 3,000 ரிங்கிட் ரொக்கத்தையும் தட்டிச் சென்றது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த பத்து ஆராங் தமிழ்ப்பள்ளிக்கு கிண்ணமும் 1,500 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியும், நான்காவது நிலையில் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியும் வெற்றி கொண்டன.
அதேவேளையில், பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் பெஸ்தாரி ஜெயா மற்றும் வாகிசர் தமிழ்ப்பள்ளிகளும் களம் கண்டன.
முழு ஆட்டத்தில் கோல் ஏதும் போடப்படவில்லை என்பதால், வழங்கப்பட்ட பெனால்டி வழி வாகிசர் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற வாகிசர் தமிழ்ப்பள்ளிக்கு ரவிந்திரன் கிண்ணமும் 3,000 ரிங்கிட் ரொக்கமும் வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்கு 1,500 ரிங்கிட் ரொக்கமும் பரிசும் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் 3ஆவது இடத்தை பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியும் 4 ஆவது இடத்தை கோல்ட் பீல்ட்டு தமிழ்ப்பள்ளியும் வென்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)