ரமல்லா,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- காசாவின் DIER AL-BALAH-இல் தடுப்பூசி செலுத்தப்படாத 10 மாத குழந்தைக்கு போலியோ நோய் கண்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே தொடங்கிய போரைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளில் காசாவில் பதிவான முதல் போலியோ சம்பவம் இதுவாகும்.
குழந்தையிடம் தென்பட்ட அறிகுறிகளைக் கண்டறிந்த பின்னர், ஜோர்டன் தலைநகர் அம்மானில் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
பின்னர், அது போலியோவிற்கான அறிகுறிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக அசுத்தமான நீர் மூலம் பரவக்கூடிய ஆபத்து நிறைந்த இந்நோயினால் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவர்.
பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் மட்டுமே போலியோ நோய்ப் பரவுவதைத் தடுக்க முடியவில்லை.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் WHO உடனடியாக பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், போலியோவிற்கு எதிராக 640,000 பாலஸ்தீன சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏழு நாட்களுக்கு போரை நிறுத்த ஐக்கிய நாடுகளின் சுகாதார மற்றும் சிறுவர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)