பெய்ரூட், 29 செப்டம்பர் (பெர்னாமா) -- பெய்ரூடில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லா தலைவர் ஹசான் நஸ்ரல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து லெபனானில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படவிருக்கிறது.
பொதுக் கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, திங்கட்கிழமை துக்கம் அனுசரிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்று லெபனானின் இடைக்கால பிரதமர் நஜீப் மிக்காத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹெஸ்பொல்லாவின் பொதுச் செயலாளருமான ஹசான் நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு நடைபெறும் நாளில் பொதுச் சேவை அலுவலகங்களும் மூடப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹசானின் இறுதி சடங்கிற்கான தேதியை ஹெஸ்பொல்லா இன்னும் அறிவிக்கவில்லை.
அதே வேளையில், ஹசானின் கொலைக்குப் பின்னர் தங்கள் நாடு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக நஜீப் மிக்காத்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சனிக்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்த வேளையில், 195 பேர் காயத்திற்கு ஆளாகினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)