கோலாலம்பூர், 05 பிப்ரவரி (பெர்னாமா) -- ரஹ்மா உதவித் தொகை எஸ்.டி.ஆர் மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, சாரா ஆகிய திட்டங்களுக்காக, 1,300 கோடி ரிங்கிட் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அதோடு, பயோங் ரஹ்மா (PAYUNG RAHMAH) திட்டத்திற்காக 30 கோடி ரிங்கிட்டும், பல்வேறு தரப்பினருடன் இணைந்து பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 70 கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பொருளாதார துணை அமைச்சர் டத்தோ ஹனிஃபா ஹஜார் தயிப் தெரிவித்தார்.
''இதன் அடிப்படையில், சுமுகமான வாழ்க்கையை வாழ்வதற்காக மக்கள் எதிர்நோக்கும் சவால் குறித்து அரசாங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. எனவே, குறுகிய கால வியூகங்கள் மூலம் வாழ்க்கைச் செலவினப் பிரச்சனையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், ரஹ்மா உதவித் தொகை மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகைக்காக சுமார் 1,300 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. சபா, சரவாக் மற்றும் லாபுவானில் பொருள் விலையைச் சீராக்கும் திட்டத்திற்காக நான்கு கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்று அவர் கூறினார்.
வாழ்க்கை செலவின அதிகரிப்பைக் கையாளுவதற்கான மலேசியப் புள்ளியியல் துறையின் பரிந்துரைகள் குறித்து, இன்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு டத்தோ ஹனிஃபா அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)