காத்மாண்டு, 28 மே (பெர்னாமா) -- எவெரஸ்ட் மலையை ஏற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்தில் இருந்து இமயமலையை பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதாக நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மலையேறிகளைப் பாதுகாப்பது, சிகரங்களின் இயற்கை அழகைப் பாதுகாப்பது மற்றும் உள்நாட்டினரின் சாதனைகளுக்கு உதவுவது ஆகியவற்றின் வழி, மலையேறும் நடவடிக்கையை அனைத்து வழிகளிலும் ஆதரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு சுற்றுலா அமைச்சர் பத்ரி பிரசாத் பாண்டே தெரிவித்துள்ளார்.
காத்மாண்டுவில் நடைபெற்ற எவெரஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய சுமார் 100 மலையேறிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பத்ரி பிரசாத் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மலையேறிகளுக்கான ஒரு நாள் மாநாட்டில், தங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வழிகள் குறித்த விவாதங்கள் இடம்பெற்றன.
8,849 மீட்டர் உயரமுள்ள எவெரஸ்ட் சிகரத்தை ஏற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பங்கேற்பாளர்கள் சிலர் கவலை தெரிவித்தனர்.
மலைகள், தற்போது கூட்டம் மிகுந்த பகுதியாகவும் அசுத்தமாகவும் மாறி வருவதாக முன்னாள் வீரர்கள் புகார் கூறினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502