கோலாலம்பூர், 29 மே (பெர்னாமா) -- தவறான ஊடக அறிக்கைகள் மூலம் தமது பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்பும் பொறுப்பற்ற தரப்புகளின் செயல்களை, கெஅடிலான் உதவி தலைவர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சாடியுள்ளார்.
இதுபோன்ற செயல்கள், அரசியல் ஆதாயத்திற்காக கட்சியின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதை தெளிவாகக் காட்டுவதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சருமான அவர் கூறியுள்ளார்.
எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிக்கையும் தமது அலுவலகம் மூலமாகவோ அல்லது தமது சமூக ஊடக தளங்கள் மூலமாகவோ மட்டுமே வெளியிடப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்துள்ளார்.
''ரஃபிசி மற்றும் நிக் நஸ்மி பதவி விலகல் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான தெளிவான சான்று" என்ற தலைப்பில், முன்னதாக தமது பெயரைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலியில் ஓர் ஊடக அறிக்கை பரவலாக பகிரப்படுவது தொடர்பில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
எனவே, அவதூறுகளைப் பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டும் சில தரப்பினரின் நடவட்டிகைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ரமணன் அறிவுறுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]