கிள்ளான், 08 ஜூன் (பெர்னாமா) -- கிள்ளான் துறைமுகம், தஞ்சோங் ஹராப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை, படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன கணவன்-மனைவி தம்பதியர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இன்று காலை 7.45 மணிக்கு மீட்கப்பட்டனர்.
32 வயது கான் ஹொன் தாட் மற்றும் 29 வயது கரீன் மேன் ஆகிய இருவரின் உடல்கள், கிள்ளானின் வடக்கு துறைமுகத்தில் உள்ள தேசிய Hidrografi மையத்தில் இருந்து 0.1 கடல் மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் அமலாக்க மற்றும் கலால் பிரிவு நடவடிக்கை அதிகாரி லெஃப்டெனன் முஹமட் ஷாஃபி சசாலி தெரிவித்தார்.
"அவ்விரு உடல்களும் (நீரில்) மிதந்த நிலையில், தனித்தனியே சுமார் 200 மீட்டர் தூர இடைவெளியில் கண்டெடுக்கப்பட்டன", என்றார் அவர்.
மீட்கப்பட்ட உடல்கள், ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8.50 மணியளவில் கிள்ளான் துறைமுகத்தில் உள்ள சிலாங்கூர் கடல்சார் படகுத் துறைக்குக் கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர், வட கிள்ளான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி, இண்ஸ்பெக்டர் முஹமட் அலிஃப் யூசோப் அவர்களை அடையாளம் கண்டு உறுதிசெய்தார்.
அதனை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக அவர்களின் உடல்கள் ஷா ஆலம் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து கண்டறிய குற்றவியல் சட்டம் செக்ஷன் 280 இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரும், மீட்டெடுக்கப்பட்ட உடல்களை கண்டு பெரும் துயரம் அடைந்தனர்.
அதோடு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)