கோலாலம்பூர், 01 ஜூன் (பெர்னாமா) -- தற்போது அமைச்சரவையை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அண்மையில் இரு அமைச்சர்கள் பதவி விலகுவதாக முடிவு செய்திருந்த போதிலும், அரசாங்கம் வழக்கம் போல தொடர்ந்து செயல்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில், சுமூகமான நிர்வாகத்தை உறுதி செய்ய தற்காலிக ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"தற்போது அமைச்சரவை மாற்றம் அவசரமில்லை. இரு அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர்.
அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க நீங்கள் அவகாசம் கொடுங்கள். இப்போது விடுமுறையில் உள்ளனர். நான் அவர்களின் விடுமுறைக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளேன். நாம் முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது அரசாங்கம் வழக்கம் போல செயல்படுகிறது," என்றார் அவர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி, PBAKL-இன் நிறைவு விழாவில் கலந்து கொண்டப் பின்னர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மே 28ஆம் தேதி, பொருளாதார அமைச்சரான, ரஃபிசியும் இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சரான நிக் நஸ்மியும் தங்களின் பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.
ரஃபிசியின் பதவி விலகல், ஜூன் 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், Nik Nazmi-யின் பதவி விலகல் ஜூலை 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் நிர்வாக விவகாரங்கள் அதன் தலைமைச் செயலாளரின் நிர்வகிப்பிம் கீழ் தொடர உத்தரவிட்டுள்ளதாக அன்வார் கூறினார்.
"அமைச்சர்கள் அவற்றை நிர்வகிக்க, அமைச்சரவையில் நான் கேட்டுக்கொள்வேன். ஆனால் இதற்கிடையில் (அவற்றின் நிர்வகிப்பைத்) தொடர அனைத்து தலைமைச் செயலாளர்களும், இயக்குநர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில், டிரம்ப் வரிவிதிப்பு பரிந்துரை குறித்து ஆசியான் மற்றும் ஜி.சி.சி, சீனா மற்றும் அமெரிக்காவுடன் நாங்கள் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்," என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502