கோலாலம்பூர், 08 ஜூன் (பெர்னாமா) -- வரைப்பட அமைப்பாளரான ஃபஹ்மி ரெசா மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை குறித்த விவகாரத்தை, மறுபரிசீலனை செய்யுமாறு தேசிய போலீஸ் படை துணைத் தலைவருக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வரை அல்லது நடப்பில் உள்ள சட்டங்களை மீறாத வரை, தனிநபர் சுதந்திரத்தை மடானி அரசாங்கம் நிலைநிறுத்துவதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மேலும் விளக்கம் அளிக்குமாறு அரச மலேசிய போலீஸ் படை, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சபாவிலும் இதுபோன்ற தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஃபஹ்மி ரெசா வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனிடையே, ஃபஹ்மி ரெசா மீது எந்தவொரு அதிகாரப்பூர்வத் தடையும் விதிக்கப்படவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் கூறியுள்ளார்.
இருப்பினும், அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அரச மலேசிய போலீஸ் படை பதிவுகளுக்காக ஃபஹ்மி ரெசாவின் பெயர் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ரசாருடின் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)