சுபாங், 08 ஜூலை (பெர்னாமா) -- 13-வது மலேசியத் திட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்று தமக்கு நம்பிக்கை உள்ளதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவரின் தலைமையிலான மடானி அரசாங்கம், நாட்டில் வாழும் அனைத்து இனங்களையும் ஒரே குடையின் கீழ் வைத்து பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"13-வது மலேசியத் திட்டத்தில், நம்முடைய பிரதமர் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக கண்டிப்பாக செயலாற்றுவார். அது நமக்கு புரிய வேண்டும். மலாய் சமுதாயம், சீன சமுதாயம், இந்திய சமுதாயம் மற்றும் சீக்கிய சமுதாயத்திற்கு இதனை வழங்க போகிறேன் என்று தனிதனியாக பிரதமர் கூற மாட்டார். ஏனென்றால், இது மடானி அரசாங்க. மடானி என்பது அனைவருக்கும் செய்யக் கூடியது", என்று அவர் கூறினார்.
சுபாங், INTI அனைத்துலக கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சமூக தொழில்முனைவோர் கருத்தரங்கிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ ரமணன் அதனை கூறினார்.
இதனிடையே, கெஅடிலான் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அக்கட்சி இன்னும் வலுவான நிலையில் உள்ளதால் பொய்யான தகவல்களைப் பரப்புவதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)