கோலாலம்பூர், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்து வரும் ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது கலவரங்களிலோ இதுவரை எந்த மலேசிய மாணவர்களும் ஈடுபடவில்லை.
இந்தோனேசியாவில் உள்ள மலேசிய கல்வி அலுவலகம் வழி, தமது தரப்பு தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதுடன், மலேசிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விஸ்மா புத்ராவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் உயர்க் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.
''இதுவரை, மலேசிய மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்த செய்தியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏனெனில் ஜகார்த்தாவில் மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலும் நாங்கள் பாதிப்புகளைக் கண்டுள்ளோம்.'' என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை அனைத்துலக மற்றும் ஆசியான் ஆய்வு கழகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், டாக்டர் சம்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.
மலேசிய கல்வி அலுவலகமும் மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அண்மைய தகவல்களை வழங்கி, கலவரங்கள் ஏற்படும் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தி வருவதாக அவர் விவரித்தார்.
ஜகார்த்தாவில் மட்டுமில்லாமல், சுமத்ரா, ஜாவா தீவு மற்றும் பிற பகுதிகளிலும் மலேசிய மாணவர்கள் உள்ளதாக டாக்டர் சம்ரி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)