புத்ராஜெயா, ஜனவரி 09 (பெர்னாமா) -- ஆரம்பப் பள்ளிகளுக்கான யூ.பி.எஸ்.ஆர் மற்றும் படிவம் மூன்று பயிலும் மாணவர்களுக்கான பி.டி3 தேர்வுகளை அமல்படுத்தப்படுவதற்கான தேவையை மதிப்பாய்வு செய்ய தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தைக் கல்வி அமைச்சு மீண்டும் செயல்படுத்தியிருக்கின்றது.
இவ்விவகாரம் குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக அம்மன்றத்தின் ஆய்வுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
யூ.பி.எஸ்.ஆர் மற்றும் பி.டி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவதைப் பரிசீலிக்குமாறு பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகப் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
"முடிவெடுப்பதற்காக ஆய்வறிக்கையையும் எடுக்கப்படும் முடிவுகளையும் பொருத்தமான அமைச்சரவை உறுப்பினர்களிடம் மதிப்பாய்வுக்காகச் சமர்பிப்போம் கூடிய விரைவில்", என்றார் ஃபட்லினா சிடேக்.
கடந்த 2021ஆம் ஆண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு நிரந்தரமாக அகற்றப்பட்ட வேளையில் 2022ஆம் ஆண்டு படிவம் மூன்று பயிலும் மாணவர்களுக்கான பி.டி3 தேர்வும் ரத்து செய்யப்பட்டதுடன் இரண்டுமே பள்ளி அடிப்படையிலான மதிப்பீடாக மாற்றப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)