சபா, ஜனவரி 19 (பெர்னாமா) -- கினபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு செயல்முறை இன்று கினபாத்தாங்கான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் மிகவும் சுமூகமாக நடைபெற்றது.
பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கிய ஒத்துழைப்பின் காரணமாக எந்தவித இடையூறும் இன்றி முன்கூட்டிய வாக்குப்பதிவு செயல்முறை சீரான முறையில் நிறைவு பெற்றதாக என்று கினபாத்தாங்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் ரவி துரைசாமி தெரிவித்தார்.
''முன்கூட்டிய வாக்குப்பதிவிற்கு முன், இன்று வாக்களிக்கும் பணியை அவர்கள் சீராக நடைபெற அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு முன்பே விளக்கமளிக்கப்பட்டது. எனவே அவர்கள் அனைத்தையும் நன்றாகப் புரிந்துகொண்டு அனைவரும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். அனைத்தும் சீராக நடைபெறுவதையும் எந்தவித பிரச்சனையும் இல்லாததையும் நான் கண்டறிந்தேன்.'' என்றார் சூப்ரின்டென்டன் ரவி துரைசாமி.
இன்று, கினபாத்தாங்கான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் உள்ள முன்கூட்டிய வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை தந்தபோது அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
முன்கூட்டிய வாக்குப்பதிவு மையம் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு இன்று மாலை 5 மணிக்கு மூடப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)