கோலாலம்பூர், மார்ச் 02 (பெர்னாமா) -- தகுதியுள்ள ஒரு கோடியே 65 லட்சம் பேரில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 48 லட்சம் பேர், அல்லது 88 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், ரோன்95 ரக பெட்ரோலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் விலையில் பயன்படுத்துகின்றனர்.
பிப்ரவரி 28-ஆம் தேதி வரை இதன் மொத்த விற்பனை மதிப்பு 1280 கோடி ரிங்கிட் அல்லது 646 கோடி லிட்டர் பயன்பாடு ஆகும் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
இது, மக்கள் எளிதில் அணுகக்கூடிய, நிலைத்தன்மை வாய்ந்த மற்றும் மக்களால் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட மைகார்டு செயல்முறையை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
''Budi மடானி ரோன்95 ஒரு தெளிவான உதாரணம். அந்நிய நாட்டவர்களுக்கானக் கசிவைத் தவிர்க்க ரோன்95 பெட்ரோல் உதவித்தொகை இலக்கிடப்பட்டுள்ளது. அதேவேளையில், மக்கள் ஒரு ரிங்கிட் 99 சென் விலையில் இலக்கிடப்பட்ட ரோன்95 பெட்ரோலை தொடர்ந்து பெறுவர்,'' என்றார் அவர்.
உதவித் தொகைக்கான வரம்பு, மாதத்திற்கு 300 லிட்டராக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட 99 விழுக்காட்டு பயனீட்டாளர்கள் அதற்கு குறைவாகவே, அதை பயன்படுத்துவது, ரோன்95-இன் உண்மையான பயன்பாட்டின் பகுப்பாய்வு காட்டுவதாக அமீர் ஹம்சா சுட்டிக்காட்டினார்.
வழக்கமான பயன்பாட்டை பாதிக்காமல் மக்களின் தினசரி தேவைக்கு போதுமானதாக இருப்பதையும் அது பிரதிபலிக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)