இஸ்லாமபாத், மார்ச் 11 (பெர்னாமா) -- வட்டாரத்தில் நிலவும் பதற்றம் காரணமாக கடல் வழிகள் அச்சுறுத்தப்படுகின்ற நிலையில், கப்பல் பாதைகளையும் எரிசக்தி விநியோகங்களையும் பாதுகாக்க “முஹாஃபிஸ்-உல்-பஹ்ர்” என்ற கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் கடற்படை தொடங்கியுள்ளது.
இதன் நோக்கம் கடல் தொடர்பு வழிகளையும் தடையற்ற கடல்சார் வர்த்தகத்தையும் பாதுகாப்பதாகும் என்று இராணுவ ஊடகப் பிரிவு, ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஐ.எஸ்.பி.ஆர் வெளியிட்ட காணொளியில், கடலில் எம்.வி. ஷாலமர் மற்றும் எம்.வி. சர்கோதா கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வழியனுப்புவதை காண முடிந்தது.
இதனிடையே, மார்ச் 9-ஆம் தேதி ஃபுஜாரியா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஓமன் வளைகுடாவில் எம்.வி. ஷாலமர் கப்பலும், அதே நாளில், எம்.வி. சர்கோதா கப்பல் ஓமான் வளைகுடாவில் இருந்து பயணித்து கராச்சி துறைமுகத்தில் சென்றடைந்ததை, கப்பல் கண்காணிப்பு தரவு காட்டுகின்றது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையினால், தெற்காசியா உட்பட உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழியாக இருக்கும் ஹொர்முஸ் நீரிணையில் எரிசக்தி ஏற்றுமதிகளில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)