ஜாலான் துன் ரசாக், 07 மே (பெர்னாமா) -- ஊடகத் துறை தொடர்ந்து ஏற்புடையதாக இருப்பதை உறுதிசெய்ய ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொண்டு அவற்றில் சிறந்து விளங்கத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தின் படுக்கா நூர்-உல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
இலக்கவியல் திறன்களில் சிறந்து விளங்க செய்திகளை வழங்குவதில் துல்லியம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மை போன்ற ஊடகத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புறக்கணிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
''இந்தச் சூழலில், ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் ஏற்கும் பொறுப்பு மிகப்பெரியது. சரிபார்ப்பில் விழிப்புணர்வு, செய்தி சேகரிப்பில் ஒழுக்கம், மற்றும் முடிவெடுப்பதில் நேர்மை ஆகியவை இதற்குத் தேவைப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இத்தொழிலின் அடிப்படை நோக்கத்தை மறக்காமல், புதிய திறன்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பார்வையாளர்களைக் கவரும் புதிய வழிகளை ஏற்றுக்கொண்டு, காலத்திற்கேற்ப பரிணமிக்கும் மனப்பான்மையையும் இத்துறையில் அவசியம்'', என்றார் அவர்.
முன்னதாக அவர் இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற ஹவானா 2026 ஊடகக் கருத்தரங்கில் வரவேற்புரை வழங்கினார்.
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் செய்தி உருவாக்கும் முறையை மாற்றியமைத்தாலும், ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிடும்போது துல்லியம் மற்றும் நேர்மை ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)