ஜெருசலேம், 1 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த மாதம் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் இராணுவப் பிரிவுத் தலைவரான முஹமட் டெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு, ஜூலை 13-ஆம் தேதி, கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையான IDF-இன் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அந்த தாக்குதலின்போது, டெய்ஃப் கொல்லப்பட்டார் என்பது உளவுத்துறை மதிப்பீட்டின் அடிப்படையில் உறுதிப்படுத்த முடியும் என்று இராணுவம் கூறியுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலின் அந்த அறிவிப்பு குறித்து, ஹமாஸ் உடனடியாக பதிலளிக்கவில்லை.
காசா போரைத் தூண்டிய தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக இருந்தவர்களில் டெய்ஃப்-உம் ஒருவர் என்றும் நம்பப்படுகிறது.
ஹமாஸின் மிகவும் மேலாதிக்க நபர்களில் ஒருவரான டெய்ஃப், 30 ஆண்டுகளில் அந்த அமைப்பின் தலைமைத்துவ பொறுப்பிற்கு உயர்ந்தார்.
சுரங்கப்பாதைகளின் வலையமைப்பு மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் நிபுணத்துவத்தையும் அவர் மேம்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)