உலகம்

தாய்லாந்து விமான விபத்தில் 9 பேர் பலி

23/08/2024 04:05 PM

தாய்லாந்து, 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பேங்காக்கில் உள்ள சதுப்பு நிலத்தில் வியாழக்கிழமை சிறிய விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் சுமார் 9 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பேங்காக்கில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானம் விபத்துக்குள்ளான இடமான, சாச்சோங்சாவ் மாகாணத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலப்பகுதியில் மீட்புப் படையினர் இன்னும் எவரையும் கண்டுபிடிக்கவில்லை என்று தாய்லாந்து ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தின்போது விமானத்தினுள் பயணிகள் ஏழுவரும் விமானிகள் இருவரும் இருந்ததாக கூறப்படும் நிலையில், அதில் இருந்தவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

தாய்லாந்து விமான சேவை நிறுவனத்தின் செஸ்னா கேரவன் C208B விமானம் பிற்பகல் மணி 2.46-க்கு பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக அந்நாட்டு பொது விமானப் போக்குவரத்து தரப்பு தெரிவித்துள்ளது.

புறப்பட்ட 11 நிமிடங்களில் அவ்விமானத்துடனான ராடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)