இஸ்லாமபாட், 07 அக்டோபர் (பெர்னாமா) -- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, நேற்று அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பகுதி முழுவதிலும் பாதுகாப்பு படையினர், அந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
பல நீதிமன்ற வழக்குகள் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இம்ரான் கானிற்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும், இம்ரன் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாஃப், பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தக் கடுமையான நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை, ஆர்ப்பாட்டக்காரர்கள் கைபர் பக்துன்க்வாவில் இருந்து இஸ்லாமபாட் நோக்கி பேரணி நடத்திய வேளையில், தடுப்பு ஏற்படுத்தியும் கண்ணீர் புகை பயன்படுத்தியும் அவர்கள் தடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தை எதிர்த்து சிறு குழுக்களாகப் பிரிந்து சில பேரணிகளை நடத்தியதில் 550கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதோடு, நேற்று, லாஹோரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)