கோலாலம்பூர், 08 மார்ச் (பெர்னாமா) - தேசிய மேம்பாட்டின் அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு போதிய கவனமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
கொள்கை வகுக்கும் நிலை உட்பட, பெண்களின் ஈடுபாடு இன்னும் குறைவாகவே இருப்பதால் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு அமைச்சும், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு KPWKM-உடன் இணைந்து பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
''அரசு ஊழியர்களிடையே பெண்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். பல முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்ட தகுந்த வாய்ப்பு, நல்ல பதவிகள், பெருமைமிக்க சாதனைகளை ஏற்படுத்தியதை நாம் பார்த்திருக்கிறோம். பெண்களின் திறன்களுக்கு ஏற்ப அவர்களின் பங்கு மற்றும் நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியுமாறு தேசிய தலைமைச் செயலாளரை வலியுறுத்துகிறேன்,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் உள்ள உலக வாணிப மையத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் அதனைத் தெரிவித்தார்.
‘Wanita Beraspirasi Membina Legasi’ எனும் கருப்பொருளுக்கு ஏற்ப, JUSA எனப்படும் முதன்மை பொது துறை பதவிகளில், பெண்களை நியமிப்பதில் தற்போது 30 விழுக்காடு அதிகரிப்பு இருந்தாலும், அதனை இன்னும் மேம்படுத்த முடியும் என்றும் அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)