வங்சா மாஜு, 11 மார்ச் (பெர்னாமா) -- இடைத்தரகர்கள் லாபம் ஈட்டுவதை தடுப்பதற்காக கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பாகோம்மில் இரட்டை முன்பதிவு இனி அனுமதிக்கப்பட்டாது.
மார்ச் 17 தொடங்கி புஸ்பாகோம் செயல்படுத்தும் மேம்பாடுகளில் இந்த நடவடிக்கையும் அடங்கும் என்று திங்கள்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இன்று காலை, கோலாலம்பூர், வங்சா மாஜு புஸ்பாகோம்மில் உள்ள வாகனங்களின் பரிசோதனை செயல்பாட்டை அதன் தலைமை நிர்வாக அதிகாரி மாஹ்மூட் ரசாக் பாஹ்மான் மற்றும் ஜே.பி.ஜே தலைமை இயக்குனர் டத்தோ ஏடி பட்லி ரம்லியுடன் இணைந்து, பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோணி லோக் அதனை கூறினார்.
இதனிடையே, இவ்வாண்டு ஜூன் மாதம் மூட திட்டமிடப்பட்டிருக்கும், கோலாலம்பூர், வங்சா மாஜுவில் உள்ள கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பாகோம்மின் செயல்பாடு, அடுத்தாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங்கில், புதிய வசதிகளைக் கொண்டு அதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
வாங்சா மாஜு கிளையின் கீழ் செயல்படும் புஸ்பாகோம், சில பள்ளிகளுக்கு அருகில் இருப்பதால் அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்தார்.
"நாங்கள் முன்னதாகவே இடம் மாற்றம் செய்ய திட்டமிட்டிருந்தோம், ஏன்? நுழைவுப் பாதை மிகவும் சிறிதாக இருப்பதால், அங்கு 2, 3 பள்ளிகள் இருக்கின்றன. லாரிகள் வரிசையில் நிற்கின்றன. அதனால் சாலைக்குள் நுழைய முடியவில்லை. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். வெளியே போக்குவரத்து நெரிசல் காரணமாக குழந்தைகள் பள்ளியை அடைய முடியவில்லை. எனவே, இந்த கிளையைப் புக்கிட் பெருந்தோங்கிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது", என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)