புத்ராஜெயா, 11 மார்ச் (பெர்னாமா) -- ஏரா எஃப்எம் வானொலி நிலையத்தை வழி நடத்தும் Maestra Broadcast நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை.
மாறாக, 2 லட்சத்தும் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசிய சட்டத்துறை அலுவகலகத்தின் அனுமதி பெற்ற பிறகே, அதற்கான அபராதம் விதிக்கப்பட்டதாக எம்சிஎம்சி கூறியது.
1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233 இன் கீழ் 2025-இல் பிப்ரவரி திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வந்த அதிகாரப்பூர்வ சட்டத்தின் அடிப்படையில் ஏரா எஃப்எம், தங்கள் டிக்டாக் தளத்தில் தகாத உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்தது குற்றமாகும்.
அவர்களின் அச்செயலைக் கண்டித்து Maestra Broadcast-இன் உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக எம்சிஎம்சி கடந்த மார்ச் 7-ஆம் தேதி அறிவித்தது.
ஆனால், எம்சிஎம்சி இந்த அறிவிப்பை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று Maestra Broadcast கேட்டுக் கொண்டது.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் மன்னிப்பு, தொகுப்பாளர்களின் இடைநீக்கம் என்று அந்நிறுவனம் எடுத்த தொடர் நடவடிக்கைகள், ஆகியவையும் பரிசீலிக்கப்பட்டதில் அவர்களின் உரிமம் ரத்துச் செய்யப்படாது என்று எம்சிஎம்சி தனது அறிக்கையில் கூறியது.
ஆனால், சமூக ஊடகத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதையும் எம்சிஎம்சி தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
பிற மத சடங்குகளை அவமதித்து, ஏரா வானொலி நிலையத்தின் மூன்று ஊழியர்கள் சமூக ஊடகத்தில் காணொளி பதிவேற்றம் செய்தது தொடபில் விரிவான விசாரணை மேற்கொள்ள தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சில் கடந்த மார்ச் நான்காம் தேதி எம்சிஎம்சிக்கு உத்தரவிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)