கோலாலம்பூர், 09 ஜூன் (பெர்னாமா) -- இலக்கியங்களின் வழி இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு பரிமாற்றத்தை சாத்தியப்படுத்தும் முன்னோடி முயற்சியாக, "முக்கோணக்கதைகள்" எனும் இலக்கிய விழா, இம்மாதம் ஜூன் முதலாம் தேதி கோலாலம்பூர், YMCA மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ், சீனம் மற்றும் மலாய் ஆகிய மும்மொழி இலக்கியங்களுக்கு இடையிலான உரையாடலாகவும், எழுத்தாளர்களின் ஒன்றுக்கூடலாகவும் இவ்விழா வடிவமைக்கப்பட்டது.
"முக்கோணக்கதைகள்" எனும் இலக்கிய விழாவில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டதுடன், அதனையொட்டி கலந்துரையாடல் அமர்வும் நடைபெற்றது.
மலாய் எழுத்தாளர் எஸ்.எம். ஷாகீரினின் 10 கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு "விண்ணிலிருந்து விழுந்த பெண்" எனும் தலைப்பில் தமிழில் எழுத்தாளர் அ. பாண்டியன் மூலம் மொழிபெயர்க்கப்பட்டது.
அதோடு, சீன மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட "செல்சி நீலம்" எனும் சிறுகதை தொகுப்பும் இந்நிகழ்ச்சியில் வெளியீடு கண்டது.
மேலும், மலேசிய தமிழர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் பத்து கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு ஒன்று மலாய் மொழியில் ச.சரவணன் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியீடு கண்டது.
இதுவரை, வல்லினம் இலக்கிய அமைப்பு செய்து வந்த மொழியாக்க முயற்சிகளின் வெற்றியாக இவ்விழா அமைந்திருப்பதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ம. நவீன் கூறினார்.
"மலேசியாவில் மொழிப்பெயர்ப்பாளர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் குறைவு என்று நான் நினைக்கின்றேன். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில். குறிப்பாக, தமிழ் இலக்கிய சூழலில். மலேசியாவில் மொழிப்பெயர்ப்பு துறை வளர வேண்டும். அப்பொழுதுதான் அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகுவர்", என்றார் அவர்.
மேலும், இம்முயற்சி மகத்தான நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருப்பதாகவும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை உருவாக்க இதுபோன்ற முயற்சிகள் அவசியம் என்று Myskills அறவாரியத்தின் தோற்றுநர் சி.பசுபதியும், பெண் மலேசியாவின் தலைவி மஹி ராமகிருஷ்ணனும் கூறினர்.
''இது ஒரு முக்கோண அன்பின் அடையாளம். இது மனதை நெகிழ செய்யும் ஒரு நிகழ்வு. மலாய், சீனம், தமிழ் போன்ற இலக்கிய பதிவுகளின் சங்கமம். இந்த மூன்று நூல்களும் கதைகளைச் சொல்வதில்லை. இவை நம்மை பிரதிபலிக்கின்றன. வர்த்தக வரி, அண்டை நாடுகளுக்கு இடையிலான போர், நம்மிடையே காணப்படும் வேறுபாடுகள், நம் ஒற்றுமைக்கு வழிவகுக்கின்றன என்பதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு'', என்று சி.பசுபதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மூன்று நூல்களின் வெளியீட்டுக்குப் பின்னர் மலாய்,சீன, தமிழ் எழுத்தாளர்கள் பங்கெடுத்த இலக்கிய அரங்குகள் இடம்பெற்றன.
இதில் டேவான் சாஸ்திரா ஆசிரியர் ஃபட்லி அல்-அகிதி, மலாயா பல்கலைக்கழகத்தின் சீன விரிவுரையாளர் ஃபுளோரன்ஸ் குவெக், மலாய் எழுத்தாளர் எஸ்.எம். சக்கீர் ஆகியோருடன் மொழிபெயர்ப்பில் பங்குவகித்த சாலினி, சரவணன், அ. பாண்டியன் ஆகியோர் பங்கெடுத்தனர்.
''டான் சிங் சின் என்ற எழுத்தாளர். நான் அவரை தேர்வு செய்ததற்கான காரணம் அவர் 70 வயதைக் கடந்தவர்கள். இன்னும் எழுத்து துறையில் இருக்கின்றார். அதே சமயத்தில் அவர் சிங்கப்பூரில் ஒரு சிறந்த இடத்தில் இருக்கின்றார். மக்களுக்கு அவரை நன்கு தெரியும். எனவே, நான் அந்த தலைமுறையை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவருடைய கதைகள் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள இடத்தை மையமாகக் கொண்ட மூன்று கதைகள். தற்போது தீய சக்திகள் நிறைந்த இடமாக இருக்கின்றது'' என்று மலாயா பல்கலைக்கழகத்தின் சீன மொழி விரிவுரையாளர் முனைவர் ஃபுளோரன்ஸ் குவெக் கூறினார்.
பன்மொழி சூழல் கொண்ட நாட்டில் இலக்கியங்களுக்கு இடையிலான விரிவான அறிமுகங்களை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், "முக்கோணக்கதைகள்" எனும் இலக்கிய விழா அமைந்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)