கோத்தா பாரு , 04 ஜூலை (பெர்னாமா) - பாசிர் மாஸ் மற்றும் தும்பாட்டில் 35.4 கிலோகிராம் எடையிலான PIL KUDA வகை போதை மாத்திரைகளை விநியோகிக்கும் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியர் உட்பட ஐவருக்கான தடுப்புக் காவல் உத்தரவு நாளை முதல் ஜூலை
11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று, பாசிர் மாஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவு நீட்டிப்பை மாஜிஸ்திரேட் வான் அஷ்ருல் அஃப்ஹாம் அஸ்மி வெளியிட்டார்.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 39B-இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று, இரு மாவட்டங்களில் நடைபெற்ற ஆறு சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கண்டறிந்ததுடன், ஐம்பது லட்சத்து 40,000 ரிங்கிட் மதிப்புடைய 35.4 கிலோகிராம் எடையிலான போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட அந்த போதை மாத்திரைகள் கிளந்தான், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகள் முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ மாட் சானி @ முஹமட் சாலாஹுடின் சே அலி தெரிவித்தார்.
மாணவர்களையும் இளைஞர்களையும் இக்கும்பல் குறி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)