கூச்சிங், 13 ஜூலை (பெர்னாமா) -- நாட்டில் கல்வியின் வெற்றிக்கு வலுவான குடும்பம் அடித்தளமானது என்றும், பிள்ளைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதரிக்கும் சூழலை உருவாக்குவதில் அது முக்கியமானது என்றும் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு, KPWKM நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த இலக்கை அடைவதில், பள்ளிகளில் குடும்பம் மற்றும் பெற்றோர் ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்துவதில் கூச்சிங் மாவட்ட கல்வி அலுவலகம் தனது அமைச்சுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி பரிந்துரைத்துள்ளார்.
"சந்துபோங்கில், ஏழு இடைநிலைப் பள்ளிகளையும் 19 தொடக்கப் பள்ளிகளையும் உள்ளடக்கிய 26 பள்ளிகள் உள்ளன. P193 நாடாளுமன்ற சேவை மையத்தில் உள்ள எனது குழுவுடன் சேர்ந்து, மாணவர்கள் வசதியாகவும் உற்சாகமாகவும் படிக்கும் வகையில் அடிப்படை வசதிகள், கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, கல்வி அமைச்சு மற்றும் சரவாக் மாநில கல்வித் துறையுடன் நாங்கள் எப்போதும் பணியாற்றுகிறோம்," என்றார் அவர்.
இன்று, கூச்சிங் மாவட்ட கல்வி அலுவலகத்தின் 2024ஆம் ஆண்டு சிறந்த சேவை விருது நிகழ்ச்சியில் உரையாற்றும்போது Santubong நாடாளுமன்ற உறுப்பினருமான நேன்சி அவ்வாறு குறிப்பிட்டார்.
பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள், சிறு உபகாரச் சம்பள உதவி, ஊக்குவிப்புத் திட்டங்கள், இலக்கவியல் கல்வியறிவு மற்றும் ஸ்டெம் துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் உதவுவதற்கான முயற்சிகளை தமது அமைச்சு தீவிரப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)