விஸ்மா பெர்னாமா, 11 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில் இருதயப் பிரச்சனைக்குப் பிறகு, அதிக அளவில் மரணத்தை விளைவிக்கூடிய இரண்டாவது மிகப் பெரிய நோயாக, புற்றுநோய் இருந்து வருகிறது.
அதிலும், ஆண்களை அதிகம் அச்சுறுத்தும் Prostate புற்றுநோய், அதிகப்படியான மரண சம்பவங்களைப் பதிவுச் செய்வதாக, உலக சுகாதார நிறுவனம், WHO-வின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இந்நிலையில், இப்புற்றுநோய் ஏற்படுவதற்கு மக்களின் மெத்தனமான போக்கும் விழிப்புணர்வின்மையும் முதன்மை காரணங்கள் என்கின்றார், சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ஜே.ஆர். சத்தியாநந்தன்.
''Prostate என்பது சிறுநீரகப் பையின் கீழ் இருக்கும். ஆண்களுக்கு மட்டுதான் Prostate உள்ளது. பெண்களுக்கு இல்லை. தற்போது மிகவும் அச்சுறுத்தும் நோய் என்னவென்றால், Prostate புற்றுநோய். ஆனால், மலேசியாவில் இதன் முதன்மை காரணம் என்னவென்றால், இது குறித்த விழிப்புணர்வு இல்லை'', என்றார் அவர்.
எவ்வித அறிகுறிகளையும் காட்டாமல் அமைதியாக வளரக்கூடிய தன்மை Prostate புற்றுநோய்க்கு இருப்பதால், பெரும்பான்மையானோர் அந்நோய் குறித்து அறியாமலே இருப்பதாக, அவர் கூறினார்.
எனினும், ஆண்கள் குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் உடல்நிலையைப் பராமரித்து கொள்வதற்கு முறையான பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்று டாக்டர் சத்தியாநந்தன் வலியுறுத்தினார்.
''பெரும்பாலும், அறிகுறிகள் இருக்காது. இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் தான் தெரியும். பி.எஸ். எ வகை பரிசோதனை செய்தால் தான் தெரியும். அதை தவிர்த்து வேறு அறிகுறிகள் என்றால் சிறுநீர் கழிப்பதில் சிரமமாக இருக்கும், இரத்தம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. இதை தவிர்த்து வேறு அறிகுறிகள் இல்லை'' என்று டாக்டர் சத்தியநாதன் கூறினார்.
மாறாக, மரபணு அடிப்படையில் இந்நோய் ஒருவருக்கு ஏற்படுமானால், 30 வயதைக் கடந்தப் பின்னர் அதற்கான பாதிப்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, அவர் எச்சரித்தார்.
இதனிடையே, உடல் ரீதியில் பல்வேறு ஆபத்துகளை வழங்கும் இப்புற்றுநோய் பற்றிய மக்களின் தவறான புரிதல்கள் குறித்து, டாக்டர் சத்தியநாதன் இவ்வாறு விளக்கினார்.
''Prostate புற்றுநோய் என்பது ஆபத்தானது அல்ல. அது உடலுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்று நினைப்பார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஏனென்றால், இது மிகவும் ஆபத்து மற்றும் குறைவான ஆபத்து என இரு வகையில் உள்ளது. ஆனால், அது ஆபத்து குறைவான புற்றுநோயாக இருந்து, பாதிக்கப்பட்டவர் 70 அல்லது 80 வயதிற்கு மேற்பட்டவர் என்றால் அதனை எவ்வித அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளாமல் பரிசோதனையின் வழி குணப்படுத்தலாம்'', என்றார் அவர்.
எனவே, ஆண்கள் தங்களின் உடல் உறுப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இதனை குறைத்து மதிப்பிடாமல், அதன் அறிகுறிகளைக் கண்டறிந்து முறையான மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்வது அவசியம் என்று அவர் அறிவுறுத்தினார்.
பெர்னாமா செய்திகள் தயாரிப்பில் ஒளியேறும் பார்வை கலந்துடையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, டாக்டர் ஜே.ஆர். சத்தியாநந்தன் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)