கூலிம், 17 ஜனவரி (பெர்னாமா) -- ஊழல் விவகாரங்களில் தொடர்புடைய மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் ஆகியவற்றின் அனைத்து கொள்முதல் முடிவுகளையும் தற்காலிகமாக முடக்குவதற்கான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்-மின் உத்தரவை உள்துறை அமைச்சு, கே.டி.என் வரவேற்கிறது.
பிரதமரின் உத்தரவிற்கு ஏற்ப, தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து அந்த அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அவாங் அலிக் ஜெமான்-னுடன் கலந்துரையாடவிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்l தெரிவித்தார்.
''தற்போதைய சூழ்நிலையில், மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதமர் கருதுகிறார். உள்துறை அமைச்சில் இதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில் இது பிரதமர் எப்போதும் கூறும் முறைகேடுகளைத் தடுப்பது, சிறந்த நிர்வகிப்பு நடைமுறை, குறிப்பாக கொள்முதல் முறை மற்றும் மக்களின் பணத்தில் ஒவ்வொரு சென்னும் கடப்பாடுடன் நிர்வகிப்பது ஆகியவை தொடர்புடையதாகும்,'' என டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
நேற்று, பாடாங் செராய்-இல், மக்கள் சேவை மையத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)