ஈப்போ, பிப்ரவரி 1 (பெர்னாமா) -- கோலாகலமாக நடைபெற்றது ஈப்போ கல்லுமலை தைப்பூச விழா
லட்சக் கணக்கான பக்தர்களுடன், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளானோர் இத்திருவிழாவில் கலந்து மெருகேற்றினர்.
பின்னிரவு மணி மூன்று தொடங்கி ஆலயத்தில் பால்குடம் தொடங்கிய வேளையில், மாலை நிலவரப்படி, சுமார் 50,000 பால் குடங்களும் 500-க்கும் மேற்பட்ட காவடிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பக்தர்களின் பசியைப் போக்க ஆலய நிர்வாகவே அன்னதான பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும், ஆலய வளாகத்தைச் சுற்றிலும் பக்தர்களின் வசதிக்காக 200-க்கும் மேற்பட்ட தண்ணீர் பந்தல்கள் போடப்பட்டன.
மேலும், ஆலயத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேலான சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு வியாபாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
நண்பகலில், பேராக் மாநில ஆட்சிக்குழு தலைவர் டத்தோ அ. சிவநேசன் ஆலயத்திற்கு சிறப்பு வருகைப் புரிந்ததுடன், கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கும் கம்போங் கப்பாயாங் அருள் மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் தலா ஒரு லட்சம் ரிங்கிட் வழங்குவதாக அறிவித்தார்.
மூன்றாவது ஆலயமாக, பீடோர் தாஹான் தோட்ட முருகன் ஆலயத்திற்கு 25,000 ஆயிரம் ரிங்கிட்டும் மொத்தம் 2 லட்சத்து 25,000 ரிங்கிட் பேராக் மாநில அரசாங்கம் மூலமாக இந்த ஆலயங்களுக்கு வழங்கப்படுகிறது,'' என டத்தோ அ.சிவநேசன் கூறினார்.
பேராக் மாநிலத்தில் மொத்தம் 11 ஆலயங்களில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)