Ad Banner
 பொது

47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு விண்ணப்பித்துள்ளார் துணைப் பிரதமர்

03/02/2026 06:21 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 3 (பெர்னாமா) -- AKAL BUDI அறவாரியத்தின் நிதியை உட்படுத்தி, நம்பிக்கை மோசடி, கையூட்டு மற்றும் கள்ளப்பணம் பரிமாற்றம் தொடர்பில் 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, அவ்வழக்கிலிருந்து தம்மை விடுவித்து விடுதலை செய்யுமாறு விண்ணப்பித்துள்ளார்.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி இவ்விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞரை அதில் பிரதிவாதியாகக் குறிப்பிட்டுள்ளதாக, டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி-இன் வழக்கறிஞரான டத்தோ ஹிஷாம் தெ போ தெயிக் தெரிவித்தார்.

டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட்-க்கு எதிராக சுமத்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகள் மீது, என்.ஃப்.ஏ எனப்படும் தொடர் நடவடிக்கை இல்லை என்ற அடிப்படையில், கடந்த ஜனவரி எட்டாம் தேதி தேசிய சட்டத்துறை அலுவலகம், ஏ.ஜி.சி வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, தங்கள் தரப்பு இவ்விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ததாக டத்தோ ஹிஷாம் தெ போ தெயிக் கூறினார்.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தமது தரப்பு அந்த விண்ணப்பத்தை AGC-யிடம் சமர்ப்பித்ததாகவும், அதனைத் தொடர்ந்து, அவ்விண்ணப்பத்தை விசாரிக்க வரும் பிப்ரவரி 24-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்ததாகவும் டத்தோ ஹிஷாம் கூறினார்.

இது தொடர்பான விசாரணையில் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)