கூச்சிங், 05 எப்ரல் (பெர்னாமா) -- குழந்தைகள், குறிப்பாக மூன்று வயதுக்குட்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வெப்ப காலத்தின்போது வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என குழந்தைகள் பாராமரிப்பு மைய நடத்துபவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தைகள் பாராமரிப்பு மையங்களில் உள்ள குழந்தைகள் தொடர்ந்து உட்புறப் பகுதிகளில் இருப்பதோடு, அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய அதிக வெப்பநிலைக்கு அவர்கள் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றும் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
''அதனால்தான், அவர்கள் எப்போதும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு நினைவூட்டப்படுகின்றனர். குறிப்பாக, அவர்களின் பராமரிப்பு மையம் அந்த வளாகத்திற்குள்ளேயே இருப்பதால். எனவே, விளையாடுவதற்காக அவர்களை வெளியே அழைத்துச் செல்ல ஊக்குவிக்கப்படவில்லை,'' என்றார் அவர்.
கூச்சிங்கில், பேங்க் ரக்யாச் நோன்பு பெருநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நேன்சி ஷுக்ரி அவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளையில், குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதையும், வெப்பமான சூழல்களுக்கு ஆளாகாமல் இருப்பதையும் உறுதி செய்வதில் பெற்றோரின் பங்களிப்பையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், குழந்தைகளுக்கும் வெப்பமான காலநிலையால் ஏற்படும் அபாயங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நேன்சி ஷுக்ரி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)