நயாரிட், மே 02 (பெர்னாமா) -- மேற்கு மெக்சிகோவின் நயாரிட் மாநிலத்தில் சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்த நிலையில் 31 பேர் காயமடைந்தனர்.
ஜலிஸ்கோவில் இருந்து பயணித்த அப்பேருந்து, அமட்லான் டி கானாஸ் நகர் அருகே உள்ள நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக உள்ளூர் அமலாக்கத் தரப்பினர் தெரிவித்தனர்.
தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு பயணிகள் அனைவரும் பொழுது போக்கு மையம் ஒன்றிற்குச் சென்றுக் கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது.
மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், தொடர் விசாரணைக்காக சாலையை மூடவும் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோவில் இருந்து அவசரகாலக் குழுக்கள், சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சாலையோரத்தில் கவிழந்து கிடந்த அப்பேருந்து முழுவதும் சகதி படிந்து இருந்தது.
சாலை சூழல் மற்றும் வாகனப் பாதுகாப்பு போன்ற காரணங்களால் மெக்சிக்கோ உட்பட லத்தீன் அமெரிக்காவில் பேருந்து சம்பந்தப்பட்ட விபத்துகள் வழக்கமாக நிகழ்கின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய மெக்சிகோவில் ஒரு இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில் 61 பேர் காயமடைந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)