புத்ராஜெயா, 08 மே (பெர்னாமா) -- கடந்த 2024-ஆம் ஆண்டு, கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் காணாமல் போன இந்திய பிரஜையான 48 வயது ஜி.விஜயலக்ஷ்மியின் குடும்பத்தினர் முன்வைத்த இழப்பீட்டு கோரிக்கை வழக்கு முழுமையாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு முன்னர், கோலாலம்பூரில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பதால் சட்ட நடைமுறையின் மூலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பொருத்தமான இழப்பீட்டு தொகையை நிர்ணயிப்பதற்காக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.
முன்னதாக, விஜயலக்ஷ்மியின் குடும்பத்தினர் தன்னை சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் அதற்கு முன்னதாகவே அவர்கள் இந்தியாவிற்குத் திரும்பியதாகவும் ஹன்னா யோ கூறினார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொண்ட ஹன்னா, தேசிய பதிவுத் துறை, ஜே.பி.என் வழங்கிய இறப்புச் சான்றிதழ் அவர்களுக்கு திருப்தியை அளித்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"இந்த கோரிக்கையை அவர்கள் ஒரு வழக்கின் மூலம் சரிசெய்ய வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அவர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். எவ்வளவு இழப்பீடு தேவை என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், கோலாலம்பூரில் இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்திருக்கிறது'', என்றார் அவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் காணாமல் போன விஜயலக்ஷ்மியின் குடும்பத்தினர் முன்னதாக இழப்பீட்டுக் கோரிக்கையை முன்வைத்ததோடு, இவ்விவகாரம் குறித்து பேச ஹன்னா யோ மற்றும் கோலாலம்பூர் டத்தோ பண்டாரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)