கோலாலம்பூர், மே 12 (பெர்னாமா) -- தலைநகரில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படும் 14 முக்கிய இடங்களை கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், (டி.பி.கே.எல்) அடையாளம் கண்டுள்ளது.
இப்பகுதிகளில் பல்வேறு தடுப்பு மற்றும் நடவடிக்கைகள் செயல்படுத்துவதன் மூலம் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, சுல்தான் இஸ்கண்டார், பூலாத்தான் டத்தோ ஓன் மற்றும் ஜாலான் துன் சம்பந்தன் ஆகியவையும் அடங்கும் என்று கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ ஃபட்லூன் மாக் உஜூட் தெரிவித்துள்ளார்.
"திடீர் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கும், நகரில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் பேணுவதற்கும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அணுகுமுறைகள் மூலம் கோலாலம்பூர் முழுவதும் வெள்ளத் தடுப்பு முயற்சிகள் வலுப்படுத்தப்படுகிறது, அவற்றில் 14 வெள்ளப் பாதிப்பு பகுதிகள் எங்களிடம் உள்ளன," என்றார் அவர்.
மே 6 ஆம் தேதி, மலாயாப் பல்கலைக்கழக மழை அளவையியல் நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 96.5 மில்லிமீட்டர் அளவிலான கடும் மழை பதிவானதாக அவர் கூறினார்.
இதன் விளைவாக, செகாம்புட் டாலாம் மற்றும் பந்தாய் டாலாம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)