கோலாலம்பூர், 15 மே (பெர்னாமா) -- உலகளாவிய செலவுகள் அதிகரித்த போதிலும், விலை மீதான அழுத்தங்கள் கட்டுக்குள் இருப்பதால், 2026-ஆம் ஆண்டில் உயர் மட்டத்தில் இருக்கும் பணவீக்கம், 1.5 முதல் 2.5 விழுக்காடு வரையிலான வரம்பிற்குள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுக் கொள்கைகளின் ஆதரவு நடவடிக்கைகள், பயனீட்டாளர் மற்றும் வணிகங்கள் மீதான தாக்கத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பேங்க் நெகாரா மலேசியா ஆளுநர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஷீட் கஃபூர் தெரிவித்தார்.
''பணவீக்கக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, 2026-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தப் பணவீக்கம் சராசரியாக 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நாங்கள் முன்பு கொண்டிருந்த எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, இது அந்த வரம்பின் உயர் முனையை நெருங்கும் போக்கைக் கொண்டிருக்கலாம். மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஏற்படும் உயர்ந்த உலகளாவிய எரிசக்தி விலைகள் மற்றும் அது தொடர்பான செலவு அழுத்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பணவீக்கம் சிறிதளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்திற்கான உயர்வு அபாயங்கள் பெரும்பாலும் வெளிப்புறக் காரணங்களால் இயக்கப்படுகின்றன,'' என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற, மலேசியாவின் முதல் காலாண்டு பொருளாதார செயல்திறன் குறித்த மத்திய வங்கியின் விளக்கக் கூட்டத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் அந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)