கோலாலம்பூர், 23 ஜூன் (பெர்னாமா) -- காசா மக்களுக்கான உதவி நிதி, அரசு சாரா நிறுவனங்களுக்கு, NGO தன்னிச்சையாக விநியோகிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.
காசாவிற்கு வழங்கப்படும் அனைத்து மனிதாபிமான உதவிகளும், வெளியுறவு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளமான 'ஒப்ஸ் எஹ்சான்' மூலம் கடுமையாக கண்காணிக்கப்படுவதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் வலியுறுத்தினார்.
இந்த 'ஒப்ஸ் எஹ்சான்', மெர்சி மலேசியா உட்பட 38 இணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் நல அறக்கட்டளை நிதியத்தின் உதவி, உரியவர்களுக்குச் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதனால்தான் நாங்கள் அதை UNRWA, OCHA, செஞ்சிலுவைச் சங்கம், மெர்சி ஆகியவற்றுக்கு நேரடியாக வழங்குகிறோம்,'' என்றார் அவர்.
சேகரிக்கப்பட்ட நிதிகள் இலக்கிடப்பட்ட குழுவைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான அறக்கட்டளைக் கணக்கு, ஏ.ஏ.கே.ஆர்.பி-இன் நிர்வாகம் மற்றும் நிர்வகிப்பு குறித்து சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் தர்மிசி சுலைமான் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு முஹமட் ஹசான் அவ்வாறு பதிலளித்தார்.
ஏ.ஏ.கே.ஆர்.பி-ஐ தேசிய தணிக்கைத் துறை கடுமையாகத் தணிக்கை செய்யவதாகவும், மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நிதி நிர்வகிப்பு அறிக்கை அவ்வப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)